சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 4, 5, 6 ஆகிய தினங்களில் ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07.12.2023) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மழையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வழியாததால் மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் தாலுகாவில் வழக்கம் போல் நாளை கல்வி நிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வெள்ள நீர் வழியாததால் மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6  தாலுகா மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..