தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திரா செல்லும் நபர்கள் சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தங்களின் பயணத்தை தொடங்கலாம். புதுச்சேரி,கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளுக்கு சென்னை கே கே நகர் மாநகர பேருந்துகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து பண்ருட்டி,கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். திருவண்ணாமலை, காட்டுமன்னார்கோவில் மற்றும் செஞ்சி செல்லும் நபர்கள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளலாம். சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மயிலாடுதுறை, நாகை, திருச்சி,மதுரை , திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.