ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பலரும் அறிந்தது. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தான் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியையும் தாண்டி சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியாவுடன் போட்டியிட முயற்சி செய்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா பாகிஸ்தான் ஒரே நாளில் சுதந்திரம் பெற்றது. ஆனால் பாகிஸ்தானில் இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாக சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஆகஸ்ட் 14 சுதந்திர தினத்தை கொண்டாட பாகிஸ்தான் அரசு சில ஆடம்பர திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் இந்தியாவுடன் போட்டி போட வேண்டும் என்று நினைத்த பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று 500 அடி உயரத்திற்கு தேசிய கொடியை ஏற்ற முடிவு எடுத்துள்ளது. அந்த கொடியின் மதிப்பு பாகிஸ்தான் நாணயத்தில் 40 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 500 அடி கொடி பாகிஸ்தானின் முக்கிய மாகாணமான பஞ்சாபில் வைத்து ஏற்றப்படும் என தெரியவந்துள்ளது.