உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்திலுள்ள உஜ்ஹானி காவல் எல்லைக்குட்பட்ட சிர்சௌலி கிராமத்தில், விளைநிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றியைப் பிடிக்க வனத்துறையினர் முகாமிட்டனர். வனச்சரக அதிகாரி சுபம் பிரதாப் சிங் தலைமையிலான குழுவினர், காட்டுப்பன்றியை வலையிட்டுப் பிடிக்க முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்தப் பன்றி சீறிப்பாய்ந்து வந்து அதிகாரி சுபம் பிரதாப்பைத் தாக்கியது. சுமார் இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக அவரைத் தரையில் தள்ளி அந்தப் பன்றி ஆக்ரோஷமாகத் தாக்கியது அங்கிருந்தவர்களை உறைய வைத்தது.

​உடனடியாக அங்கிருந்த மற்ற ஊழியர்கள் தடிகளால் பன்றியை அடித்து விரட்டி, காயமடைந்த அதிகாரியை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்ட வனத்துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வனவிலங்கு மீட்பு நடவடிக்கையின் போது நிகழும் ஆபத்துகளை உணர்த்தும் இந்த அதிரடியான மற்றும் பதைபதைக்க வைக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.