தமிழக-கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி ஒன்று போடி முந்தல், போடிமெட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசியை  கேரளாவுக்கு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ,  நேற்று முன்தினம் இரவு,  தனிப்படை போலீசார், தீவிரமாக  ரோந்து பணியில் ஈடுபட்டு, போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் வேகமாக வந்த ஜீப்பை வழி மறித்தனர்.

ஆனால் ஜீப் ஓட்டுநர் நிற்காமல் வேகமாக சென்றதையடுத்து, போலீசார் வாகனத்தில் ஜீப்பை  பின்தொடர்ந்து சென்று, முந்தல் சோதனை சாவடி முன்பு அந்த  ஜீப்பை மடக்கி பிடித்தனர்.  இதனையடுத்து போலீசார் நடத்திய   சோதனையில் வாகனத்தில் மூட்டை முட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதன் பின் விசாரணை நடத்தியதில் அவர்கள், கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி பாரதி, சக்தி குமார், சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த வனத்துரை, வீரபாண்டி ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை  கடத்த முயன்ற 5 பேரையும்  போலீசார் கைது செய்தனர். பின் அவர்களிடம் இருந்து 2 டன்  ரேஷன் அரிசி, ஜீப், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட  5 பேர் மீதும் காவல் நிலையங்களில், ஏற்கனெவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.