தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு முன்மாதிரி சாலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி சாலையிலே விபத்திலா பகுதியாக மாற்றுவதற்கு போலீஸ் போக்குவரத்து துறை, மாநகராட்சி தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட திட்டம் வகுத்து வருகிறார்.

இதில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்தியா, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கீதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தமிழ்செல்வன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரமேஷ், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் முத்துக்குமார், ரெட் கிராஸ் தலைவர் வரதராஜன், பொருளாளர் ஷேக் நாசர் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்காக தன்சை மேம்பாலம் ரவுண்டானா முதல் பிள்ளையார்பட்டி ரவுண்டானா வரை 6.5 கிலோமீட்டர் தூரம் சாலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணியினை தஞ்சை மாவட்ட ரெட் கிராஸ் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை  ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து கலெக்டர் கூறியதாவது, மருத்துவ கல்லூரி சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை 100% அமல்படுத்த அனைத்து துறைகளும் கூட்டாக செயல்பட இருப்பதாகவும் பொது மக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்தில் சாலையாக மாற்றுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.