கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் தங்கராசு. இவருடைய மகன் சுப்பிரமணியன் (52). விவசாயியான இவருக்கு சரண்யா (26) என்ற மகள் மற்றும் சக்திவேல் (25), சக்தி (22) என்ற 2 மகன்களும் உள்ளனர். அதில் மகள் சரண்யாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர்களுக்கு குணமங்கலம் எல்லையில் உள்ள மெயின்ரோடு அருகில் 2 வீடுகள் உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த 2 வீடுகளில், 1 வீட்டை 3 ஆண்டுகள் ஒப்பந்தம்
என்ற முறையில் வாடகைக்கு கொடுத்துள்ளார். அந்த வீட்டில் டாஸ்மாக் கடை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மகன் சக்திவேலுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக திருமணம் செய்ய பெண் பார்த்துள்ளனர். ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. ஏனென்றால் டாஸ்மாக் கடை நடத்துவதற்காக, வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ள குடும்பத்தில், பெண் கொடுக்க முடியாது என்ற கருத்து நிலவியது. இதனையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை நிர்வாகத்தினரிடம் ஒப்பந்தம் முடிந்து விட்டதால், வீட்டை காலி செய்யுமாறு சுப்ரமணியன் கூறியுள்ளார்.

அதன்பின் தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், அவர்கள் கடையை காலி செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் சுப்பிரமணியன் ஆத்திரமடைந்து, உறவினர்கள் 20 பேருடன் சேர்ந்து நேற்று மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் கடை முன்பு திரண்டார். பின் அவர்கள் பாய், தலையணை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டுவந்து, அதில் சமையல் செய்ய தொடங்கினார்கள். அப்போது, அங்கு டாஸ்மாக் கடை திறக்க வந்த ஊழியர்கள், அவர்களிடம் நாங்கள் கடையை திறக்க வேண்டும், நீங்கள் கலைந்து செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு,10 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால், இதுபற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர். பின் வீட்டு உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், டாஸ்மாக் மேலாளர் சுப்பிரமணியனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும்  பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் வேறு இடத்திற்கு கடையை விரைவில் மாற்றி விடுவதாக டாஸ்மாக் மேலாளர் கூறிய பின்னும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை ஏற்க மறுத்தனர். பின்  10 நாட்களுக்குள் கடையை காலி செய்யாவிட்டால், கடையை பூட்டி சாவியை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.