சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் தெற்கு காடு பகுதியில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆத்தூர் விநாயகபுரத்தில் இருக்கும் வங்கியில் நகைகளை அடகு வைத்து 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கினார். இதனையடுத்து பணம் மற்றும் தன்னிடம் இருந்த 6 பவுன் தங்க நகைகளை பையில் வைத்து மொபட்டின் சீட்டுக்கு அடியில் வைத்தார்.

இதனையடுத்து தனது உறவினரான மணிகண்டனிடம் செல்வராஜ் பணத்தை கொடுப்பதற்காக சென்றார். அவர் மஞ்சினி ரயில்வே கேட் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் உங்கள் மொபட்டில் இருந்து பணம் கீழே விழுகிறது என கூறியதோடு, அவரை நம்ப வைப்பதற்காக 4 பத்து ரூபாய் நோட்டுகளை சாலையில் போட்டனர்.

இதனை நம்பி செல்வராஜ் சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தபோது இரண்டு வாலிபர்களும் மொபட்டின் சீட்டை திறந்து அதிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து செல்வராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையில் இரண்டு வாலிபர்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.