தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவில் பெயிண்டரான முனியாண்டி(45) என்பவர் வசித்து வருகிறார். அதற்கு கார்த்தீஸ்வரி(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் மகிழன்(6) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் முனியாண்டிக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த முனியாண்டி மோட்டார் சைக்கிளில் தனது மகனை நாவாசாலை பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் தோட்டத்து கிணற்றில் மகனை தள்ளி கொலை செய்து விட்டு முனியாண்டி தப்பி சென்றார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முனியாண்டியை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது, எனது வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கை வெறுத்து எனது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.