சக மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறிய நீதிபதி மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த 8 சீனியர் மாணவர்கள் திருப்பூரை சேர்ந்த இரண்டாம் ஆண்டு படித்துவரும் விடுதி மாணவர் ஒருவரை தங்களது அறைக்கு தூக்கிச்சென்று மதுபானம் வாங்க பணம் தரவில்லை எனக்கூறி மொட்டை அடித்து விடுதி அறையில் பூட்டி ரேகிங் செய்ததாக பீளமேடு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மாணவரின் பெற்றோர் அளித்த இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரால் ராகிங் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 8 மாணவர்களும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான பாதிக்கப்பட்ட மாணவரும், அவரின் தந்தையும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கூறியதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து 8 மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ரேகிங் செய்வதாக இருந்தால் கல்லூரிக்கு செல்ல வேண்டிய நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பினார். இதற்கு படிக்காமல் இருப்பது நல்லது என தெரிவித்தார். ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை எனவும், மற்றொருவரை துன்புறுத்துவதன் மூலம் என்ன இன்பம் கிடைக்கிறது என புரிந்துகொள்ள முடியவில்லை. பள்ளியில் படித்த திருக்குறளை வாழ்க்கையில் பின்பற்றாவிட்டால்  அதை படித்து என்ன பயன்? என குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

படிக்க வைப்பதற்காக பெற்றோர் படும் கஷ்டத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனித தன்மையற்ற ராகிங் செயலால் மற்றவர்களை துன்புறுத்தல் செய்து இன்பம் அடைபவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என கூறிய நீதிபதி, மாணவர் பருவத்தை இளைய சமுதாயத்தினர் ரசித்து வாழவேண்டுமே தவிர ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்..