பெங்களூரு கிராமப்புற மாவட்டம் ஹெப்பகோடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பாலை பகுதியில், செவ்வாய்க்கிழமை மாலை ஒரே வீட்டில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மந்திரா மொண்டல் (27) என்பவர் தனது கணவர் பிஜோன் மொண்டலை 2 வருடங்களுக்கு முன்பு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவரது கணவரின் நண்பரான சுமன் மொண்டல் (27) என்பவர் அந்த வீட்டில் சென்று மந்திராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் கழுத்தை அறுத்து கொலை செய்து பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மந்திராவுக்கும் பிஜோனுக்கும் திருமணம் நடைபெற்று 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குடும்ப பிரச்சனையால் இருவரும் பிரிந்து விட்டனர். மந்திரா தனது 6 வயது மகனுடன் தனது தாயுடன் வசித்து வந்தார். சம்பவம் நேர்ந்த போதும், அந்த குழந்தை தாத்தா பாட்டியின் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பியது.

போலீசாரின் விசாரணையில், சுமனும் பிஜோனும் தினக்கூலி வேலை தேடி கடந்த ஆண்டு அந்தமான் தீவுகளுக்கு சென்றதும், சுமன் 15 நாட்களுக்கு முன்பு தான் பெங்களூருக்கு திரும்பியதும் தெரியவந்துள்ளது.

கொலை சம்பவம் நடைபெற்ற நாள் முந்தைய நாள் மாலையில் சுமன் மந்திராவின் வீட்டுக்கு வந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமன் மந்திராவை கொன்றதும், பின்னர் தற்கொலை செய்துகொண்டதும் போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருவரின் உடல்களும் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மந்திராவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது ஒருபக்கம் காதல் முறிவால் நிகழ்ந்த கொலை தற்கொலை என தோன்றினாலும், மற்றொரு பக்கம் மூன்றாவது நபர் இதில் தொடர்புடையவரா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

“இருவரும் உறவில் இருந்ததாகத் தெரிகிறது, ஆனால் இது மந்திராவின் குடும்பத்தினருக்கு தெரியாமல் இருக்கலாம்” என போலீஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் பெங்களூரு புறநகரில் பெரும் சோகத்தையும், காதல் முறிவின் முடிவுகள் குறித்து சிந்திக்கவைக்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.