செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கி இருந்த சிறுவன் செல்வன் கடந்த 31.12.2022 அன்று உயிரிழந்துள்ளான். இதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் பிரியாவுக்கு இழப்பீடாக 7.5 லட்சம் ரூபாயும் முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவியாக ரூ.2.5 லட்சம் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வழங்கி ஆணையிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம் அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் தற்போது கட்டப்பட்டு முடிவு நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை சிறுவனின் தாயார் பிரியாவிற்கு ஒதுக்கீடு செய்யவும் முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.