திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் குளம் அமைத்து மீன் வளர்ப்பு வரும் விவசாயிகளுக்கு பண்ணை குட்டை புனரமைப்பதற்காகவும், விரால் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் 10 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.75 ஆயிரத்தில் 40 சதவீதம் மானியமாக 30 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு தகுந்தார்போல் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்களில் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவள நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04366-290420 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.