கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.மலையனூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உறவினர்களான மாணிக்கவேல், ராஜேஸ்வரி, சத்யராஜ் உள்ளிட்ட 26 பேருடன் தேனி மாவட்டத்தில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாமியை தரிசனம் செய்துவிட்டு நேற்று மதுரை வழியாக ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

அந்த வேனை ஐயப்பன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சிப்பட்டி இணைப்பு சாலை அருகே சென்ற போது திடீரென பின்பக்க டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.