ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான ‘பாஸ்பால்’ அணுகுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் எடுபடாததால், ஆஷஸ் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலேயே தோற்று இங்கிலாந்து தொடரை இழந்துள்ளது. இந்தச் சூழலில், ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்துவது எப்படி என்பது தெரிந்த ஒருவரால் மட்டுமே இங்கிலாந்து அணியை மீட்க முடியும் என பனேசர் வலியுறுத்தியுள்ளார்.

“>

இந்திய அணி ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தது. குறிப்பாக, பல முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் இளம் வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவை அதன் கோட்டையிலேயே வீழ்த்திய ரவி சாஸ்திரியின் வியூகங்களை பனேசர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பலவீனங்களை அறிந்து, மன ரீதியாகவும் உத்தி ரீதியாகவும் அவர்களை எதிர்கொள்ள சாஸ்திரியே சரியான தேர்வு என்றும், அவரே இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வர வேண்டும் என்றும் அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.