தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியது..

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கில் சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும்,  காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கில் 880 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 31ஆம் தேதி மாலை வரை மேற்கு, வட மேற்கு திசையிலும், இதனையடுத்து 1ஆம் தேதி மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று 30ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், 31ஆம் தேதியை பொருத்தவரை தமிழக கடலோர மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், 1ஆம் தேதி இலங்கை திரிகோண மலையை கடந்து செல்லும்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்..

மேலும் பிப்ரவரி 1ஆம் தேதி 11 மாவட்டங்களில் கன மழை பெய்தற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீனவர்களுக்கு உண்டான எச்சரிக்கையை பொறுத்தவரை 30ஆம் தேதி, 31ஆம் தேதி, 1ஆம் தேதிகளில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும், இடையில் 65 கிலோமீட்டர் வரைக்கும் வேகம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த மாதிரியான நேரங்களில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் மீனவர்கள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.