ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத உறவினர்கள் சிறப்பு ரயிலில் ஒடிசா வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து குறித்து கோரமண்டல ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், “முதலில் கேபிள் வயர்கள் கழன்று விழுந்தது. அதன்பின் ரயில் மொத்தமும் குழுங்கி அனைவரும் கீழே விழத் தொடங்கினர். காப்பாற்றுங்கள் என்ற மரண ஓலம் காதில் ஒலித்தது. உடனே இறங்குங்கள் ரயில் தீப்பிடித்துவிடும் என எச்சரிக்க அனைவரும் ஓடினர். கை, கால் இழந்தும் இறந்த நிலையிலும் பலர் கிடந்தனர். இடம் முழுவதும் இருட்டாக இருந்தது” என வேதனையுடன் கூறினார்.