கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு பகுதியில் மரிய ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் ரஞ்சித்(27) என்ற மகன் உள்ளார். இவர் டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இந்நிலையில் பிரவீன் ரஞ்சித்திற்கும் இன்ஜினியரிங் பட்டதாரியான 27 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரண்டு வருடமாக ரஞ்சித்தும் இளம் பெண்ணும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் ரஞ்சித்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதை அறிந்த இளம்பெண் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த ரஞ்சித் குருந்தன்கோடு குளம் அருகே இளம்பெண் நடந்து சென்ற போது அவரை வழிமறித்து முதுகில் தாக்கியுள்ளார். மேலும் இளம்பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி கத்தியால் அவரது வயிற்றில் குத்தி விட்டு ரஞ்சித் தப்பி சென்றார்.

இதில் படுகாயமடைந்த இளம் பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.