காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொளுத்துவான் சேரி பகுதியில் ராணி பாய் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியில் மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கஞ்சா போதையில் சில வாலிபர்கள் கடைக்கு சென்றனர். அவர்கள் ஓசியில் போண்டா, பஜ்ஜி கேட்டு மூதாட்டியிடம் தகராறு செய்துள்ளனர். ஆனால் மூதாட்டி தர மறுத்ததால் கோபமடைந்த வாலிபர்கள் பஜ்ஜி, போண்டாக்களை கீழே தள்ளிவிட்டனர்.

மேலும் கியாஸ் சிலிண்டரின் டியூப்பை பிடுங்கி சிலிண்டரை தூக்கி மூதாட்டி மீது போட்டுள்ளனர். இதனால் அலறி துடித்த மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதற்கிடையே காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாலிபர்களை தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.