கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகலக்கோட்டை கிராமத்திற்கு நர்சரி பண்ணைகளில் செடிகள் ஏற்றுவதற்காக நேற்று காலை சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வேனை ஓசூரை சேர்ந்த மஞ்சு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மேலும் இரண்டு பேர் வந்தனர். இந்நிலையில் சின்ன பென்னாங்கூர் அருகே தனியார் கிரானைட் மற்றும் டைல்ஸ் கடை அருகே சென்றபோது வேனில் இருந்து புகை வந்ததால் மஞ்சு வாகனத்தை நிறுத்தினார்.

உடனே மூன்று பேரும் கீழே இறங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.