நெல்லையில் பேன்ஸி ஸ்டோர் கடையில் பணியாற்றிய இளம் பெண் வெட்டி கொலை  செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் சந்தியா வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 18 வயது ஆகிறது. இவர் அந்த கடையில் பல நாட்களாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகு நிலைய பொருட்கள் விற்பனை கடையில் பணியாற்றிவரும் சந்தியா இன்று கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை பக்கத்தில் உள்ள குடோனில் இருந்து எடுத்து வருவதற்காக சென்றுள்ளார்..

அந்த குடோன் கடையிலிருந்து சற்று தூரமாக இருக்கிறது. பொருட்களை  எடுத்து வருவதற்காக சென்ற சந்தியா  ரொம்ப நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை என்பதால் அங்கு பணி செய்யக்கூடியவர்கள் சென்று பார்க்கும்போது ரத்த வெள்ளத்தில் சந்தியா இறந்து கிடந்துள்ளார். கண்ணன் என்ற இளைஞர் சந்தியாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து  உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், கடையில் வேலைபார்ப்பவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலை ஏற்க மறுத்ததால் இந்த கொடூர கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் நெல்லை டவுனில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொலை செய்து தப்பிய கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் கடையில் வேலைபார்க்கும் சக பணியாளர்கள் கதறி அழும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.