காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா.

தெலங்கானா மாநிலத்தின் அரசியலில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று சொல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஒய். எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கினார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ் ஷர்மிளா. அதன் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஷர்மிளா போட்டியிடவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்திருந்தார். அவருடைய கட்சி பல இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதையும், பிரச்சாரங்களில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.

அப்போது இருந்தே விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த தகவல் உறுதியாகியுள்ளது. டெல்லியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில்  இணைந்துள்ளார். அவர் மட்டுமின்றி மேலும் தன்னுடைய கட்சியையும் காங்கிரசுடன் சேர்த்து இணைத்துள்ளார்.

இந்த இணைப்பு நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் இருந்துள்ளனர். மிக முக்கியமாக இனி அடுத்ததாக தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. அடுத்ததாக ஆந்திராவில் கட்சியை வலுப்படுத்த போகிறார்கள். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ஷர்மிளாவை களம் இறக்குவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே அவருக்கு என்ன மாதிரியான வாய்ப்பு வழங்கப்படும் என கேள்வி எழுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்படுவததற்கான வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக அவரை நியமித்து, அதன் மூலமாக அவருடைய செயல்பாடுகளை ஆந்திராவில் அதிகரிக்கலாம் என இரண்டு திட்டங்களை காங்கிரஸ் முன் வைத்துள்ளதாக தெரிகிறது. இதில் மிகவும் கவனம் கொள்ள வேண்டியது, 2021 ஆம் ஆண்டுக்கு முன் வரைக்கும் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தான் சர்மிளா இருந்து வந்துள்ளார். அவருடைய அம்மாவும் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

அவருடைய அரசியல் பார்வை மாற ஆரம்பித்து தெலுங்கானா மாநில அரசியலில் கவனம் செலுத்த தொடங்கி மீண்டும் ஆந்திர மாநில அரசியலுக்கு களம் திரும்பியுள்ளார். இதில் மிக முக்கியமாக இவருடைய அம்மா தாயார் விஜயம்மா ஒ எஸ் ஷர்மிளாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே இனி ஆந்திர மாநிலத்தில் சகோதரன் மற்றும்  சகோதரிக்கு இடையிலான நேரடி களப்போட்டியாக இந்த சூழல் மாறப்போகிறது.

ஏற்கனவே இன்னொரு பக்கம் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சியாக இருந்து காய்களை நகர்த்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னை வலுப்படுத்த கவனம் செலுத்துகின்றனர். ஏற்கனவே தென்னிந்தியாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றனர். கர்நாடகா, தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடித்துள்ளனர். கேரளா மாநிலத்தில் அவர்களுடைய வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. மீதமுள்ளது புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா. இதில்  அவர்களுக்கு ஈசியான டார்கெட்டாக இருப்பது ஆந்திரா. எனவே முதல்வராக இருக்கக்கூடிய ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியை தன் பக்கம் இழுத்து தற்போது தேர்தல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளனர். இனி ஆந்திர மாநிலத்தின் தேர்தல் காலம் என்பது அதிக சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும்..