ஒடிஷாவின் பத்ரக் மாவட்டத்தில், வியாழன் இரவு ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன மழையில் அடைக்கலம் தேடி, கிராமப்புற சாலையின் ஓரத்தில் ஒரு கடைக்கூரையின் கீழ் இந்த பெண் நின்றிருந்தார். அப்போது அங்கு லாரியில் வந்த ஒரு ஓட்டுநர் லாரியை பின்னோக்கி நகர்த்தி நிறுத்திவிட்டு, வெளியே இறங்கி ஓரமாக நின்ற இந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி கொண்டு அவளது கூக்குரல்களைப் பொருட்படுத்தாமல் கடத்தி சென்றார். இந்த முழு சம்பவமும் அருகிலுள்ள CCTV கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இது வைரலானதும் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பத்ரக் நகர காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிந்து குற்றவாளி மற்றும் லாரியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். பத்ரக் மற்றும் அண்டை மாவட்டங்களில் சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு லாரி தேடப்பட்டு வருகிறது. இதுவரை பெண் மீட்கப்பட்டதாகவோ குற்றவாளி கைது செய்யப்பட்டதாகவோ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.