பெங்களூரு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ராமநகரா பகுதியில் உள்ள சாந்திலால் லே அவுட் பகுதியில், கட்டுமானத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாகச் செயல்பட்டு வந்த போலி கரன்சி தயாரிப்பு முகாமைப் காவல்துறையினர் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். குறிப்பிட்ட அந்த வீட்டில் போலிக் கரன்சிகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, உள்ளூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு அதிரடிச் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின் போது அங்கிருந்த 7 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சந்தோஷ், சம்பத், கோவிந்தராஜ், ரேணுகாராஜ், ராஜேஷ், சிவராஜ் மற்றும் சதீஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரான சந்தோஷிற்கு கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி, சம்பத் என்பவர் மூலமாக இந்தச் சட்டவிரோதச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. முழுமையான கரன்சி தாள்களை அச்சிடாமல், வெள்ளை காகித ரோல்களை ரசாயனக் கரைசலில் நனைத்து, வெயிலில் உலர்த்தி, கரன்சி அளவுக்கு வெட்டி வைக்கும் இரண்டாம் கட்டப் பணிகள் அங்கு நடைபெற்று வந்துள்ளன.

சம்பவ இடத்திலிருந்து சுமார்ட் 10 கட்டு அரை முடிக்கப்பட்ட காகிதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தாள்களில் வெறும் கண்களுக்கு எந்தக் குறியீடுகளும் தெரியாவிட்டாலும், புற ஊதா கதிர் ஒளியில் பார்க்கும்போது கரன்சி நோட்டின் வாட்டடங்கள் தெளிவாகத் தெரிவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாள்கள் முழுமையாகத் தயாரிக்கப்பட்டால் சுமார் 5 லட்சம் ரூபாய் முகமதிப்பு கொண்ட போலிக் நோட்டுகளாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், இவை முழுமையான கரன்சிகளாக மாற்றப்படாததால் இப்போதைக்கு அவற்றை போலிக் கரன்சி என முழுமையாக வகைப்படுத்த முடியாது என்று காவல் கண்காணிப்பாளர் ரோகன் ஜெகதீஷ் விளக்கமளித்துள்ளார்.

இந்தக் காகிதங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, இதற்குப் பிந்தைய அச்சிடும் வேலைகள் எங்கு நடைபெறுகின்றன மற்றும் இந்தச் சதிச் செயலின் பின்னணியில் உள்ள மிகப்பெரிய கும்பல் யார் என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

“>

 

கட்டுமானத்தில் உள்ள வீடுகளை மையமாக வைத்து இதுபோன்ற குற்றச் செயல்கள் அரங்கேறி வருவது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.