துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் திரும்பிய இடமெல்லாம் பிணக்குவியலும் மர்ம ஓலங்களும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளும் மட்டுமே காண முடிகின்றது. மலை போல் குவிந்து கிடக்கும் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இந்த பணியில் இந்தியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பார்க்கும்போது 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்பு படையினர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடன் டிராக்டர்கள், கிரேன்கள், புல்டோசர்கள் என சுமார் 6000க்கும் மேற்பட்ட வாகனங்களும் களத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டு கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அதன்படி தற்போது வரை நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் போர்க்கால அடிப்படையில் துருக்கிக்கு விரைந்துள்ளனர். அவர்கள் காசியான்டெப் மாகாணத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அங்கு கட்டிட இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருந்த 6 வயது சிறுமியை அவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனால் இந்திய வீரர்களுக்கு துருக்கி மக்கள் நன்றியும் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.