சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற நபராக மாற வேண்டும் என்ற ஆசை, 14 வயது சிறுவனின் உயிரைப் பறித்துள்ள சோகம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட மிதுன் என்ற சிறுவன், தனது குடும்பத்துடன் ஹைதராபாத் மல்லாப்பூர் பகுதியில் வசித்து வந்தான். சக நண்பர்கள் சமூக வலைதளங்களில் சாகச வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் பதிவிடுவதைப் பார்த்து உத்வேகம் அடைந்த மிதுன், தானும் அதுபோலப் புகழ்பெற விரும்பி ஒரு ஆபத்தான முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

​தனது வீட்டின் குறுகிய பால்கனி கைப்பிடிச் சுவரில் நின்றபடி ஆபத்தான சாகசத்தைச் செய்தபோது, மிதுன் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சமூக வலைதளப் புகழுக்காகத் தங்களது உயிரைப் பணயம் வைத்து இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.