கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மகள் சசிகலா. 24 வயதாகும் இவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களில் விக்னேஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். குழந்தை பிறந்தால் கணவன் திரும்பி விடுவார் என்று சசிகலாவும் பொறுமையாக இருந்த நிலையில் குழந்தை பிறந்த பிறகும் விக்னேஷ் திருந்துவதாக தெரியவில்லை.

இதனால் வெறுத்துப்போன சசிகலா, கணவனின் தாயார் பார்வதியிடம் இது தொடர்பாக கூறி மகனை தட்டிக் கேட்கும் படி கூறியுள்ளார். ஆனால் அவரோ, நீதானே கட்டிக்கிட்டு வந்த, நீயே வச்சு வாழு என நக்கலாக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சசிகலா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சசிகலாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விக்னேசையும் அவருடைய பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தாய் உயிரிழந்து விட தந்தையும் சிறைக்குச் செல்ல தற்போது ஒரு மாத குழந்தை அனாதையாக தவித்து வருகிறது.