இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்றில், ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தை குழந்தைகள் பார்க்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திகா அண்ணாமலை, தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஏழு வயது சிறுவனைப் பற்றி குறிப்பிட்டார். அந்த சிறுவன் ஓடிடி தளத்தில் கூலி படத்தைப் பார்த்துவிட்டு, அதில் உயிருடன் நாற்காலியில் வைத்து எரிக்கும் காட்சிகளால் பயந்து, நாற்காலியில் அமரவே அஞ்சியதாக தெரிவித்தார். ஐந்து நாட்களாக அவன் நாற்காலியைப் பார்த்தாலே பயந்து ஓடுவதாகவும், தற்போது அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் கூறினார்.
இதனால், பெரியவர்களுக்கான திரைப்படங்களை பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று மருத்துவர் வலியுறுத்தினார். குடும்பமாகப் பார்த்தாலும், படத்தில் வரும் சில காட்சிகள் குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்து, அவர்களை உளவியல் ரீதியாகப் பாதிக்கலாம் என்று எச்சரித்தார். எனவே, குழந்தைகளை மனதில் கொண்டு, பெற்றோர்கள் பொருத்தமான படங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்று அவர் அறிவுறுத்தினார்.
