இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான காணொளி ஒன்றில் முசிறி என்று அழைக்கப்படும் எறும்பு வகை குறித்து ஒருவர் அழகாக விளக்கியுள்ளார். முசிறி எறும்புகள் ஒற்றுமையாக வாழும் அற்புதமான உயிரினங்கள். இவை தங்கள் கூட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும். கூட்டில் தேவையற்ற குச்சிகள் அல்லது பொருட்கள் இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்திவிடும். இவை பெரிய இலைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் துண்டு துண்டாக மடித்து, ஒட்டி ஒரு கூடு போல உருவாக்குகின்றன. இந்த இலைக் கூடு காய்ந்து போகும் வரை இவை அதில் வாழும். கூடு காய்ந்தவுடன், புதிய கூடு தயாரிக்கத் தொடங்கிவிடும். இந்தக் கூட்டில் முட்டைகள் இடுவதோடு, காயமடைந்த எறும்புகளையும் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ளும்.
முசிறி எறும்புகள் தங்கள் கூட்டையும், இருக்கும் மரத்தையும் பாதுகாக்க மிகவும் திறமையாகச் செயல்படும். வேறு தாவர உண்ணிகள் அல்லது பூச்சிகள் மரத்தைத் தாக்க வந்தால், இவை ஒன்று சேர்ந்து அவற்றை விரட்டி அழித்துவிடும். காயமடைந்த எறும்பு இருந்தால், மற்ற எறும்புகள் ஒன்றாகச் சேர்ந்து அதைத் தூக்கி, கூட்டிற்கு எடுத்து வந்து பராமரிக்கும். இவற்றின் ஒற்றுமையும், கூட்டு உழைப்பும், பாதுகாப்பு உணர்வும் இயற்கையின் அற்புதமான எடுத்துக்காட்டாக உள்ளது.
