இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் ஸ்டாருமான மகேந்திர சிங் தோனி, சென்னையில் உள்ள என்.எஸ்.ஜி  பயிற்சி மையத்தில் கமாண்டோ வீரர்களுடன் நெகிழ்ச்சியாக உரையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சாதாரண டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, கையில் உணவுத் தட்டுடன் தோனி வீரர்களுடன் ஜாலியாகப் பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, உடற்தகுதி குறித்த பேச்சு எழுந்தபோது, தோனி தன்னைத்தானே சுட்டிக்காட்டி, “நான் பிட்டாகத் தெரிகிறேன் அல்லவா?” என்று நகைச்சுவையாகக் கேட்க, அங்கிருந்த கமாண்டோக்கள் அனைவரும் மனமுார சிரிக்கின்றனர்.

இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வகிக்கும் தோனியின் இந்த எளிய குணத்தையும், நகைச்சுவை உணர்வையும் நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த வைரல் வீடியோ தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்த விவாதங்களையும் மீண்டும் கிளப்பியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாததால், அவர் ஓய்வு பெறப் போகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

“>

 

நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்விக்கான விடை இன்னும் கிடைக்காத நிலையில், கமாண்டோக்களுடனான அவரது இந்த லேட்டஸ்ட் சந்திப்பு இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.