பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள உயர் அதிகாரியே, மோட்டார் வாகனச் சட்டத்தை மதிக்காமல் பொது வெளியில் இவ்வாறு சென்றது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், இதே பெண் அதிகாரி அண்மையில்தான் போக்குவரத்து விதியை மீறியதற்காகச் சாமானிய நபர் ஒருவருக்கு ரூ.6,000 அபராதம் விதித்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோ வெளியானதால் அதிகாரிகளின் “இரட்டை நிலைப்பாடு” குறித்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், “பொதுமக்களுக்கு விதிகளை விதிக்கும் காவல்துறையினர், முதலில் தாங்கள் அதை முறையாகப் பின்பற்றி முன்மாதிரியாகத் திகழ வேண்டும்; சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்” என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.