பீகார் மாநிலம் கயா – பாட்னா ரயில் பிரிவுப் பாதையில், டெஹ்தா மற்றும் ஜெஹானாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ரயில்வேயின் உயர் அழுத்த மின்சார ஒயரை  துணிகரமாக வெட்டித் திருடிச் சென்றுள்ளனர். அதிகாலை 3:05 மணியளவில் அரங்கேறிய இந்தத் திருட்டுச் சம்பவத்தில், சுமார் 100 மீட்டர் நீளமுள்ள 25,000 வோல்ட் உயர் அழுத்த மின்சார ஒயர் திருடப்பட்டுள்ளது.

 

இதனால் அந்தப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, ரயில் சேவை முற்றிலும் முடங்கியது. இதனையடுத்து, மாற்று ஏற்பாடாக ஒற்றை ரயில் பாதை முறை தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் தங்களின் பயண நேரத்தை இழந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். அந்த ஒயர்களை முழுமையாக மாற்றி காலை 6:26 மணியளவில் இப்பாதையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருடப்பட்ட மின்சார ஒயர்களை மீட்டெடுத்துள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினர், இத்துணிகரத் திருட்டில் ஈடுபட்ட மர்மக் கும்பலை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.