சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர். பி. கவாய் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின், விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழக்கறிஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், திருமாவளவன் பயணித்த கார் அருகே வந்து உரசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர், கார் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைக் கண்ட விசிக தொண்டர்கள், அந்த வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் விசாரணையில், அந்த பைக்கில் வந்தவர் சென்னை நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என அடையாளம் காணப்பட்டார். இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில்,  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பைக் ஓட்டிய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், இந்த  சம்பவம் குறித்த விளக்கத்தை திருமாவளவன் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் என்னை பார்த்துக்கொண்டே வந்து, திடீரென பைக்கை நிறுத்தி காரை நோக்கி கத்தினார். இதனால் வாகனத்தை இயக்க இயலாமல் போனது. நான் உள்ளே இருப்பதை அறிந்தும் அவர் வம்பிழுத்தார். கட்சி தொண்டர்கள் அவரை தள்ளிச் செல்லச் சொன்ன போது, அவர் வம்பிழுத்து பேசினார். சிலர் அவரை அடிக்க முயன்ற நிலையில், போலீசார் உடனடியாக தடுத்து, அவரை தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
என் கார், அவரது வாகனத்துடன் மோதவில்லை; அதேபோல் அவரது வாகனமும் என் காருடன் மோதவில்லை. மேலும் இது குறித்து அண்ணாமலை போன்றோர் அரசியல் வக்காலத்து வாங்கி திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை தாக்க முயன்ற விவகாரத்தில், மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டியுள்ளது,” என்று திருமாவளவன் தெரிவித்தார்.