கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற இளம்பெண்ணைத் தடுத்து நிறுத்திச் சில இளைஞர்கள் கேலி செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தைரியமாகத் தன்னைத் தொந்தரவு செய்தவர்களைத் தனது அலைபேசியில் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார். “தனியாக வரும் பெண்களைக் கோவில் போன்ற புனித இடங்களிலும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை” என அவர் வேதனையுடன் அதில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

​இந்த விபரீதச் செயலுக்குச் சரியான வளர்ப்பு முறை இல்லாததே காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். சினிமாவில் வரும் ஈவ்-டீசிங் காட்சிகளை நிஜ வாழ்க்கையிலும் இளைஞர்கள் பின்பற்றுவது தான் இதுபோன்ற தவறுகளுக்கு அடிப்படை என ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் நடந்த இடத்தைக் கண்டறிந்து, அந்த இளைஞர்களைக் காவல்துறையினர் தண்டிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.