திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக இருக்கலாம், ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ அந்த ஆசையை ஒரு வேடிக்கையான திருப்பத்திற்கு கொண்டு சென்றுள்ளது. வீடியோவில் 18 வயது இளைஞன் ஒருவன், தன் தந்தைக்கு எதிராகப் புகார் அளிக்க நேரடியாகக் காவல் நிலையத்திற்கே சென்றுவிட்டான். வீட்டார் தனக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறார்கள் என்பதுதான் அவனது கோபத்திற்கு ஒரே காரணம். அந்த வீடியோவில், ஏதோ உலக மகா பிரச்சினையில் இருப்பது போல அந்த இளைஞனின் முகம் மிகத் தீவிரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
காவல் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர், “ஏன் இங்கே வந்தாய்?” என்று கேட்க, அந்த இளைஞனோ சற்றும் யோசிக்காமல், “அப்பா எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்கிறாரு” என்று பதிலளிக்கிறான். அதற்கு அந்த அதிகாரி, “பெற்றோர் கடவுளுக்குச் சமமானவர்கள், அவர்களுக்கு எதிராகப் போகக்கூடாது” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அந்த இளைஞன் கேட்பதாக இல்லை. “எனக்கு 18 வயசு ஆயிடுச்சு, அதனால எங்க அப்பாகிட்ட சொல்லி எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லுங்க” என்று விடாப்பிடியாகக் கூறுகிறான். அந்த இளைஞனின் அப்பாவித்தனமான ஆனால் பிடிவாதமான கோரிக்கையைக் கண்டு அங்கிருந்த போலீசார் சிரிப்பை அடக்க முடியாமல் திகைத்துப் போயினர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, இணையத்தில் ஒரு சிரிப்பலை உண்டாக்கி வருகிறது.
