ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது வள்ளியம்பாளையம் பிரிவு பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார்(22) என்ற மகன் உள்ளார். இவர் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவகுமாரும் பவானியைச் சேர்ந்த ஜனனி(22) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி சவுண்டபூரில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு வீட்டு பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சிவகுமாரின் பெற்றோருடன் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.