வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாஸ் பாக்கெட்டுகள், அதன் காலாவதி தேதியைத் தாண்டி 2 முதல் 3 ஆண்டுகள் வரை பழையதாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் மீண்டும் வைரலாகி, ரயில்வே உணவின் தரம் குறித்த பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நீல நிற சட்டை அணிந்த பயணி ஒருவர், ரயில்வே ஊழியர்களிடம் ஆவேசமாக வாதிடும் அந்த வீடியோவில், “யாருக்காவது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?” என்று காட்டமாக கேள்வி எழுப்புகிறார்.

​இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), இது கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நடந்த பழைய சம்பவம் என்றும், இது தொடர்பாக ஏற்கனவே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், கட்டுப்படியாகும் விலையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பிரீமியம் ரயில்களிலேயே இவ்வளவு அலட்சியமாக காலாவதியான உணவுகள் வழங்கப்படுவது பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது என நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.