உளுந்து பயிரில் டி.ஏ.பி கரைசல் தெளிப்பது குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உளுந்து பயரில் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறுவதற்கு இரண்டு சதவீத டி.ஏ.பி கரைசல் தெளிப்பது அவசியம். அதாவது ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊறவைத்து கலக்கி விட வேண்டும்.

இதனையடுத்து மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை வேளையில் கைத்தெளிப்பான்கள் கொண்டு ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து 35-ஆவது நாள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 45 ஆவது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையும் கரைசல் தயாரித்து இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

இப்படி செய்வதனால் மண்ணிலிருந்து நேரடியாக மணிசத்தை  எடுத்துக் கொள்ளமுடியாத  பயிர்கள் டி.ஏ.பி கரைசல் மூலமாக இலை வழியாக மணிசத்து அளிக்கும் போது பயிர்கள் உடனடியாக மணிசத்தை பெறுவது மட்டுமல்லாமல் உருவாகும் பூக்களை எல்லாம் பிஞ்சுக்களாக மாறி காய்களாக உருவாக்கி அதில் உள்ள விதைகள் எல்லாம் நல்ல திரட்சியான எடையுடன் கூடிய தரமான மணிகளாக கிடைக்கிறது. இதன் காரணமாக வழக்கத்தை விட ஒரு ஏக்கரில் 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. அதனால் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டி.ஏ.பி கரைசல் தெளித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.