சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபுரி பகுதியில் அக்காள்- தங்கையான 16 மற்றும் 14 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் முறையே 10, 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு சிறுமிகளும் சாமிநாதபுரம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் தோழிகளுடன் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிசிபாளையத்தை சேர்ந்த மாணவியின் தந்தையை ஆசிரியர் பள்ளிக்கு வரவழைத்து அவரது படிப்பு குறித்து கூறியுள்ளார்.

இந்நிலையில் படிப்பில் போதிய ஆர்வம் இல்லாமல் தோழிகள் மன உளைச்சலில் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற 4 மாணவிகளும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் 4 பேரையும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாயமான மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.