இந்தோனேசியாவில் உள்ள நிக்கல் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, ராட்சத லாரியும் ஜேசிபி இயந்திரமும் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இந்தோனேசியாவின் வடக்கு மாலுக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நிக்கல் சுரங்கத்தில் இந்தப் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. சுரங்கப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலப்பரப்பில் அதிரும் சத்தம் கேட்டுள்ளது. ஆபத்தை உணர்ந்த லாரி ஓட்டுநர் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் ஆகிய இருவரும், வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதே உயிரைக் காத்துக் கொள்ள கீழே குதித்து ஓடினர்.

அவர்கள் கீழே குதித்த அடுத்த சில விநாடிகளில், மலைப் போன்ற மண்பரப்பு ஒட்டுமொத்தமாகச் சரிந்தது. ஒரு நிமிடம் 14 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ராட்சத டிரக் மற்றும் ஜேசிபி இயந்திரம் ஆகியவை பொம்மையைப் போலச் சரிந்து மண்ணுக்குள் புதைவதைக் காண முடிகிறது. இயற்கைச் சீற்றத்தின் கோரத் தாண்டவத்தை விளக்கும் இந்த வீடியோ காண்போரை உறைய வைத்துள்ளது.

 

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “வாகனங்களிலிருந்து குதித்தவர்கள் பாதுகாப்பாகத் தப்பினார்களா?” என்றும், “முதல் நிலச்சரிவு ஏற்பட்டபோதே பணியை ஏன் நிறுத்தவில்லை?” என்றும் இணையவாசிகள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயற்கையின் அழிவு சக்தியையும், சுரங்கப் பணிகளில் இருக்கும் அபாயத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது.