இமாச்சலப் பிரதேசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியுள்ளது. ​தர்மசாலாவில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த 19 வயது தலித் மாணவி, ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். புவியியல் துறை உதவிப் பேராசிரியர் அசோக் குமார் என்பவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், செப்டம்பர் மாதம் மூன்று சீனியர் மாணவிகள் தன்னை மிகக் கொடூரமாகத் தாக்கி ராகிங் செய்ததாகவும் அந்த மாணவி மரணத்திற்கு முன் வெளியிட்ட வீடியோவில் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 26-ம் தேதி சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவின் உத்தரவின் பேரில், உதவிப் பேராசிரியர் அசோக் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட மூன்று சீனியர் மாணவிகள் மீது ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து கையில் எடுத்துள்ளதுடன், உண்மையைக்கண்டறிய ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. நீதிக்காகக் காத்திருக்கும் அந்த மாணவியின் குடும்பத்தினருக்கு இச்சம்பவம் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது.