புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் மாரிமுத்து(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்துவிட்டு மாரிமுத்து வீட்டிற்கு வந்து உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென குமட்டல் எடுத்து மாரிமுத்து வாந்தி எடுத்தார். இதனை பார்த்த மாரியப்பன் ஏன் வாந்தி எடுக்கிறாய்? என தனது தாயிடம் கேட்டுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சமைத்து வைத்திருந்த சாதம், குழம்பு, பழைய சோறு ஆகியவற்றில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை கலந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக தனது தாயை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் மூதாட்டி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாரியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எங்கள் குடும்பத்திற்கு இந்த கிராமத்தில் நிறைய எதிரிகள் இருக்கின்றனர். என்னிடம் மோத முடியாமல் எனது தாயை கொல்வதற்காக உணவில் விஷம் கலந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.