ஆதார் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். இது வெறும் அடையாள அட்டை மட்டும் அல்லாமல் வங்கி சேவை முதல் பல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிம்கார்டு, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்களில் ஆதார் இணைப்பதை அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. ஆதார் மூலமாக வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் புதிய வகையான மோசடிகள் சமீப நாட்களாகவே அதிகமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஓடிபி அல்லது ஒப்புதல் கோரிக்கை பெறாமலேயே மக்கள் தங்களுடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை இழக்கிறார்கள்.

ஆதார் மூலம் நடக்கும் இந்த புதிய வகை மோசடி செய்பவர்கள் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பணத்தை எடுத்து விடுவார்கள் . இதற்காக உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு ஓடிபி அல்லது ஒப்புதல் கோரிக்கை வராது. உங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி உங்கள் அனுமதி இல்லாமலேயே வங்கிக் கணக்கை காலி செய்து விடுவார்கள். இதிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்றால் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க வேண்டும். அதில் உள் நுழைவதன் மூலம் உங்களுடைய ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்ய முடியும். உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருட முடியாது.

இதற்கு முதலில் UIDAI இன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அதில் உள்நுழைய ஆதார் இணைப்பு மொபைல் நம்பரை உள்ளிடவும். ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட நம்பர்க்கு OTP வரும். அதை பதிவிடவும். உள்ளே சென்றதும் உங்களுக்கு பல விருப்பங்கள் காட்டப்படும். இந்த விருப்பங்களில் ஒன்றுதான் ‘Lock/Unlock Biometric’ ஆப்சன். இதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்யலாம்.