ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி அணி தங்கள் தரப்பு போட்டியிடும் எனக் கூறிய நிலையில் ஓ.பி.எஸ் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இது அரசியல் சூழ்நிலையில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பாக எங்கள் அணியினர் போட்டியிடுவோம். தேர்தல் படிவத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் கையெழுத்திடுவேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜ.க ஆதரவு கேட்டால் கொடுப்போம். அவர்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பா.ஜ.க விற்கு  ஆதரவு கொடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பு மாறி மாறி பா.ஜ.க தலைமை அலுவலகத்திற்கு விசிட் அடித்து வருகின்றனர். ஆனால் பா.ஜ.க தலைமை இதுவரை யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட முடிவில் இருப்பதை இந்த மௌனத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் முடிவு என்னவாக இருக்கும்.