கடைசி டி20யில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று  முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்..

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியது. தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரின் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை 1-1 என்ற கணக்கில் பதிவு செய்துள்ளன. தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சப்மன் கில் 3 போட்டிகளில் 360 ரன்கள் குவித்து தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.. ஆனால் டி20 போட்டிகளிலும் அதே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்.

இந்நிலையில், இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜூனியர் உலக கோப்பையை வென்ற அதிரடி வீரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனேரியா கூறியதாவது, இதுதான் கடைசி ஆட்டம். சுப்மன் கில் எப்படி விளையாடுகிறார் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பிருத்வி ஷா ஒரு அற்புதமான இளம் கிரிக்கெட் வீரர். அவர் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். நீங்கள்  கில்லுக்கு வாய்ப்பளிக்கிறீர்கள். ஷாவுக்கு திறமை இருக்கிறது. அவர் தொடர்ந்து விளையாடினால், அவர் தனது திறமையை வெளிப்படுத்தி அற்புதங்களைச் செய்ய முடியும் என்றார்.

மேலும் கில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அவரது பேட்டிங்கில் சில குறைபாடுகள் உள்ளன, அவை கவனிக்கப்பட வேண்டும். அவர் இன்னும் தனது ஸ்பின் மற்றும் பவுன்ஸ் பந்துகளில் பணியாற்ற வேண்டும். இந்தியா வெற்றி பெற்றாலும் அணிக்கு இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. சில நேரங்களில் கடினமான ஆடுகளங்களில் விளையாட வேண்டியிருக்கும்.கடைசி டி20யில் இஷான் கிஷனை வெளியேற்றினால், விக்கெட் கீப்பராக யாரைக் கொண்டு வருவீர்கள்? எனவே மற்றொரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அணியில் தேவை” என்று கூறினார்.