இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களைப் பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? அடிப்படை வசதிகள் எவற்றையும் மேம்படுத்தாமல், விளம்பரத்துக்காகவும், இறப்புகளை மூடி மறைப்பதற்காகவும், இழப்பீடு மட்டும் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளை தள்ளிப் போடுவதால் என்ன சாதிக்க நினைக்கிறது? இனியும் அரசின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறி போனால், திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 ஆம் தேதி, மழை வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பிரசவ அவசரத்திற்கு ஆம்புலன்ஸோ மற்ற வாகனங்களோ கிடைக்காமல் வடசென்னை கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மசூத் – சௌமியா தம்பதியினரின் குழந்தை மருத்துவமனைக்கு மீன் பாடி வண்டியில் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்த நிலையில், பிறந்திருக்கிறது. இந்நிலையில் குழந்தையின் தாய் உயிரையாவது காப்பாற்ற, புளியந்தோப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அரசு மருத்துவமனையின் கதவுகளை திறக்க மறுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொப்புள் கொடி அறுக்கப்பட்டு பின்னர் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். குறித்த நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் பச்சிளம் குழந்தையின் உயிர் பறிபோனது மட்டுமல்லாமல், தாயின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் விதமாக அரசு மருத்துவமனையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடலை, கொடுக்க பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உச்சகட்ட அவலமாக, குழந்தையின் உடலை துணியில் கூட சுற்றிக் கொடுக்காமல் சாதாரண அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்திருக்கிறார்கள். தமிழக மருத்துவ துறை வரலாற்றில் இந்த சம்பவம் மிகப் பெரும் கருப்புப் புள்ளி.

நமது நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவத்துறையின் தலைநகராக விளங்கிய தமிழகம், கடந்த சில ஆண்டுகளாகவே, சொல்லொணா அவல நிலைக்குச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 2022 ஆண்டு நவம்பரில் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்தார். கடந்த மார்ச் மாதம் வரை, 21 மாதங்களில் 247 குழந்தைகள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மரணமடைந்துள்ள அதிர்ச்சி செய்தி கிடைத்தது.

கடந்த ஜூலை மாதம், தஞ்சாவூர் மாவட்டத்தில், அங்கன்வாடியில் தடுப்பூசி போடப்பட்ட 10 மாத பெண் குழந்தை மயக்கமடைந்து உடனடி சிகிச்சை அளிக்காமல் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதம், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 5 ஆண்டுகளாக தவறான சிகிச்சை காரணமாக காவலர் ஒருவரின் 10 வயது பெண் குழந்தையின் வலது கால் பாதிப்படைந்ததால், அவர் தன்னையும் குழந்தையையும் கருணைக் கொலை செய்யும்படி வேதனை தெரிவித்திருந்தார். அதே ஆகஸ்ட் மாதம், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக ஒன்றரை வயது ஆண் குழந்தையின் வலது கை அழுகி அகற்றப்பட்டதோடு, சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பலியான துயரமும் நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில், ஆஞ்சியோ சிகிச்சை பெற வந்த பெண்ணின் கையை, தவறான சிகிச்சை காரணமாக அகற்றியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் தொடரும் இதுபோன்ற தவறான சிகிச்சைகள் காரணமாக உயிரிழப்புகள் தொடர்கதை ஆகியிருக்கின்றன. எளிய மக்களின் ஒரே நம்பிக்கையான அரசு மருத்துவமனைகள், இதுபோன்று உயிர்களை பறிக்கும் இடங்களாக மாறி வருவதை குறித்து பொதுமக்களும், தமிழக பாஜகவும் பலமுறை கேள்வி எழுப்பியும், திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், மடை மாற்றுவதையே வேலையாக கொண்டிருக்கிறது.

ஐரோப்பாவுக்கு இணையான மருத்துவ கட்டமைப்பு என்று முதலமைச்சர் ஒருபுறம் கூறுவதும், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் மரணங்களுக்கு தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று, பிறரை கைகாட்டி அமைச்சர் தப்பிக்க முயற்சிப்பதும் எந்த பலனையும் தரப்போவதில்லை என்பதை திமுக அரசு உணர வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களுக்கும், மருத்துவமனை பணியாளர்களுக்கும் பற்றாக்குறை உள்ளதா, அதன் காரணமாக குறித்த நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனரா என்பதை கண்டறிந்து, உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் கடமை.

ஏழை எளிய மக்களின் அடைக்கலமான அரசு மருத்துவமனைகளில், தரமான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய மருத்துவ வசதிகளுக்கு, கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக முழுவதும், குறிப்பிட்ட இடைவெளிகளில் அரசு மருத்துவமனைகளில் ஆய்வுகள் நடத்தி, அடிப்படை வசதிகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.

இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களை பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? அடிப்படை வசதிகள் எவற்றையும் மேம்படுத்தாமல், விளம்பரத்துக்காகவும், இறப்புகளை மூடி மறைப்பதற்காகவும், இழப்பீடு மட்டும் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளை தள்ளிப் போடுவதால் என்ன சாதிக்க நினைக்கிறது? இனியும் அரசின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறி போனால் திமுகவுக்கு எந்த காலத்திலும் மன்னிப்பு கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்.