சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக உள்ளது. மெட்ரோவில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ ரயில் டிக்கெட் வாட்ஸ்ஆப்பில் பெரும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நாளை அறிமுகம் செய்ய உள்ளது.

இதன் மூலம் வாட்ஸ்ஆப் செயலியில் எங்கு செல்ல வேண்டும் என்கிற விவரத்தையும் பணத்தையும் செலுத்தினால் டிக்கெட் உடனடியாக வாட்ஸ்ஆப்பில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவில் தினசரி பல லட்சம் பேர் பயணம் செய்வதுண்டு. வேகமாக  போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல வேண்டும் என்று பலரும் மெட்ரோவில் பயணிக்கின்றனர். டிக்கெட் பெற அதிக நேரம் கூட்டத்தில் நிற்பதை தவிர்க்க இந்த புது அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.