காப்பகம் ஒன்றில் மோசமான சூழலில் மீட்கப்பட்ட 17 நாள் பச்சிளம் குழந்தைக்கு, நேபாள அமைச்சர் சீதா பாடி தனது சொந்தக் குழந்தையைப் போலத் தாய்ப்பால் ஊட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், உலகளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவின் நக்சல் பகுதியில் அமைந்துள்ள ‘பால் மந்திர்’ என்ற காப்பகத்தில் 15 நாட்கள் முதல் இரண்டு வயது வரை உள்ள சுமார் 20 பச்சிளம் குழந்தைகள்

“>

மோசமான நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கனமழையின்போது கழிவுநீர் வளாகத்திற்குள் புகுந்ததால், குழந்தைகள் அனைவரும் ஒரேயொரு அழுக்கு மெத்தையில் படுக்கவைக்கப்பட்டு, சுற்றிலும் காய்ந்த நூடுல்ஸ்கள் சிதறிக் கிடக்கும் அவல நிலை நிலவியது.

சமூக வலைதளங்களில் பரவிய தகவலின் மூலம் இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் சீதா பாடி, எந்தவித முன்னறிவிப்புமின்றி உடனடியாக அந்தக் காப்பகத்திற்கு நேரில் சென்று குழந்தைகளை மீட்க உத்தரவிட்டார். கடந்த ஜூலை 19 அன்று, மீட்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலையை ஆய்வு செய்வதற்காக மருத்துவக் குழுவுடன் அங்கு சென்றபோது, 17 நாட்களான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று பசியால் அழுதுள்ளது. அங்கு பால் கிடைக்காததைக் கண்ட அமைச்சர் சீதா பாடி, உடனடியாக அக்குழந்தையைத் தன் கைகளில் ஏந்தி இரண்டு முறை தாய்ப்பால் ஊட்டியுள்ளார். இதனால் அழுகையை நிறுத்திய குழந்தை நிம்மதியாக உறங்கியது.

ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், “நான் அவளைக் கையில் ஏந்தியபோது என் சொந்தக் குழந்தை போலவே உணர்ந்தேன்” என்று தெரிவித்தார். பல நாட்களாகக் குழந்தை சரியாகச் சாப்பிடவில்லை என்று கூறியபோது, “இப்போது நான்தான் அவளுடைய தாய்” என்று அவர் உணர்ச்சிகரமாகப் பதிலளித்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் காப்பகத்தின் நிலைமைகளை மேம்படுத்த ஐந்து புதிய பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதே பகுதியில் அரசு நிலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நான்கு மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் காப்பகங்களுக்கான புதிய விதிகளும் பரிசீலனையில் உள்ளன.

வறுமை மற்றும் சமூகப் பாகுபாடுகளுக்கு மத்தியில் போராடி வளர்ந்து, தனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியைத் காப்பகத்தில் கழித்த சீதா பாடி, மார்ச் 2026-ல் நேபாளத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இவரது இந்தத் தாய்மை உள்ளம் தற்போது பலரையும் நெகிழச் செய்துள்ளது.