குடும்பத் தலைவரின் ஆவணங்களை வைத்து குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் ஆதார் முகவரியை ஆன்லைனில் மாற்றி அமைக்கும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியானது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. ஏனென்றால் ஆதார அட்டையில் முகவரியை மாற்றி அமைப்பதற்கு தங்கள் பெயரில் போதுமான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதற்கு ஆதார் அட்டை முகவரியை மாற்ற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கும், குடும்ப தலைவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு அவர்களது ரேஷன் அட்டை, பள்ளி சான்றிதழ், திருமண சான்றிதழ், பெயர்கள், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை ஆதாரமாக சமர்ப்பித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதில் மேலே கூறப்பட்டுள்ள உறவுமுறைக்கான ஆதாரங்கள் இல்லாத சமயத்தில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள குறிப்பிட்ட வடிவத்தில் குடும்ப தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சுய சான்றிதழை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். இணைய வழியாக முகவரியை மாற்ற விரும்புபவர்கள் https://myaadhar.uidai.gov.in/ என்ற வலைதளத்தில் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம்.

இதனையடுத்து குடும்ப தலைவரின் ஆதார எண்ணை சரிபார்த்தல் நடைமுறைக்காக பதிவு செய்ய வேண்டும். அதன்பின் உறவுமுறை, ஆவண சான்று இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இதற்காக 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த கட்டணம் செலுத்திய பின் விண்ணப்பம் தொடர்பாக குடும்ப தலைவருக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது. அந்த மெசேஜ் கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளத்திலேயே குடும்ப தலைவர் தன்னுடைய ஒப்புதலை தெரிவிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவான 30 நாட்களுக்குள் இந்த கோரிக்கையை குடும்பத்தலைவர் நிராகரித்தாலோ அல்லது தன்னுடைய முகவரியை பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காவிட்டாலோ  சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தகவல் விண்ணப்பித்தவருக்கு மெசேஜ் மூலமாக கூறப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணம் திருப்பி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.