அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இந்திய மாணவர்கள் நான்கு பேர் அமெரிக்காவில் இறந்துள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது. இதில் இந்திய வம்சவழி நிர்வாகியான விவேக் தனேஜா என்பவர் வாஷிங்டனில் வைத்து மர்ம நபரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

41 வயதான இவர் டைனமோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குறிப்பிட்ட நபர் ஒருவருக்கும் விவேக்கிற்கும் இடையே இரண்டாம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் அந்த நபர் விவேக்கை தாக்கியதில் கீழே விழுந்தவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் விவேக்கை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு இந்த கொலையில் தொடர்புடையவர் பற்றிய தகவல் கொடுத்தால் அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.